

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணியை சோதனை முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக நகரப் பகுதியில் உள்ள உப்பளம் தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் பிரதான சாலையில் சோதனை அடிப்படையில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன், பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாவ் ஆகியோர் சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது, “பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது கடினமாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திரம் நிறுவனத்தினர், முதல்வரை சந்தித்துப் பேசினர். அப்போது, முதலில் சோதனை முறையில் 6 மாதம் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு எத்தனை இயந்திரங்கள் தேவை இருக்கிறது என்பதை கணக்கிட்டு வாங்கலாம் என்று முதல்வரும், நானும் ஆலோசித்தோம். அதன் அடிப்படையில் இன்று சோதனை முறையில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் சோதனை முறையில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் செய்யப்படும். புதுச்சேரியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. இதற்காக வரும் செப். 1, 2 ஆகிய தேதிகளில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் பாட்டீல் தலைமையில் அனைத்து மாநில அமைச்சர்களும் பங்கேற்க உள்ள நிலையில் நானும் கலந்து கொள்ள இருக்கிறேன்.
அதற்கு முன்பு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து, மாநிலத்துக்கு என்னென்ன தேவை இருக்கிறதோ அதையெல்லாம் தயார் செய்து, பொதுப்பணித்துறை செயலர் உள்ளிட்ட குழுவினர் டெல்லி சென்று மத்திய அரசு திட்டங்களை கொண்டு வரவுள்ளோம். துரிதமாக பாதாள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையிலான திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகளை உடனே தொடங்க உத்தரவிட்டுள்ளேன். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் இன்று காலை கூட பேசினேன். விரைவில் பணிகள் தொடங்கப்படும். பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்” என்று அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வன், கண்காணிப்பு பொறியாளர் சுந்தர மூர்த்தி, செயற் பொறியாளர்கள் சுந்தரி, ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.