

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்.
தூத்துக்குடி: வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதி. தொகுதியின் நடுவே பாய்ந்து ஓடும் தாமிரபரணி நதியால், இத்தொகுதி முழுவதும் விவசாய பூமியாக விளங்குகிறது. பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலிலில் ஈடுபட்டுள்ளனர்.
நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நவ கைலாயங்கள், நவதிருப்பதி கோயில்கள் என வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களையும் கொண்டது இத்தொகுதி. ஏ.பி.சி.வீரபாகு, சி.பா. ஆதித்தனார் போன்ற முக்கிய தலைவர்கள் வென்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெரும்பான்மையாக நாடார் சமுதாய மக்கள் சதவீதம், தேவர் 15 சதவீதம், தேவேந்திரகுல வேளாளர் 14 சதவீதம் பேர் உள்ளனர்.
1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி ஒரு இடைத்தேர்தல் உள்பட இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 8 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
2021-ம் ஆண்டு தேர்தல்
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் 76,843 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் 59,471 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்பையா பாண்டியன் 12,706 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் ஏரல் ரமேஷ் 10,203 வாக்குகளையும் பெற்றனர்.
மக்களிடம் ஆதரவு திரட்டும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன்.
15 பேர் போட்டி
2026 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக இருக்கிறார். இவருக்கு எதிராக தொகுதியில் ஆங்காங்கே சில அதிருப்திகள் நிலவுகின்றன. மேலும் சொந்த கட்சிக்கு உள்ளேயே இவருக்கு எதிர்ப்பு இருக்கிறது.
தொகுதி மக்கள் மட்டுமின்றி கட்சிகாரர்களே இவரை எளிதாக தொடர்பு கொள்ள முடியாது என்பது தான் இவர் மீதான பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் மக்கள் மத்தியில் உள்ளது.
அதேநேரத்தில் தொகுதியை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு தனது பொறியியல் கல்லூரியில் ஆண்டு தோறும் இலவசமாக படிக்க வாய்ப்பு, இலவச அகடாமி மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி போன்றவற்றை இவரது முக்கிய பணிகளாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் வி.ஜி.சரவணன்.
மேலும், கூட்டணி பலம் இவருக்கு வலுவாக உள்ளது. தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகள் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும், அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் கூடுதல் மாணவர்களுக்கு இலவச கல்விக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதிகளை அளித்தும் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர்
ஊர்வசி அமிர்தராஜை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக எஸ்.பி.சண்முகநாதன் 6-வது முறையாக போட்டியிடுகிறார். ஏற்கெனவே 2001, 2011, 2016 தேர்தல்களில் வென்ற சண்முகநாதன், ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை அமைச்சர்களாக பதவி வகித்துள்ளார். 2006 மற்றும் 2021 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
எளிமையானவர், உள்ளூர்வாசி, எப்போதும் அணுகலாம் என்பது அவருக்கு சாதகமான அம்சங்கள். மேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கணிசமாக உள்ள பாஜக மற்றும் அமமுக வாக்குகள் அவருக்கு கைகொடுக்கும் என அதிமுகவினர் உறுதியாக நம்புகின்றனர்.
வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.சண்முகசுந்தரம்.
தான் அமைச்சராக இருந்த போது தொகுதிக்கு செய்த பணிகள், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறியும், மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால் நிறைய திட்டங்களை கொண்டு வரலாம் என கூறியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த முறை புதிதாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக சார்பில் வி.ஜி.சரவணன் போட்டியிடுகிறார். இவர் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறியும், தொகுதியில் நெல், வாழை, முருங்கை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும், இளைஞர்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறி ஆதரவு திரட்டி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடு்ம் எஸ்.சண்முகசுந்தரம் தாமிரபரணி நதி மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். கல்குவாரி, மணல் கொள்ளை போன்ற இயற்கை வளங்களை சுரண்டும் நடவடிக்கைகளை தடுத்து இயற்கை வளங்களை பாதுகாப்போம் என கூறி மக்கள் மத்தியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் யாரை மக்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்
நவதிருப்பதி கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணை, 53 பாசனக்குளங்களை தூர்வார வேண்டும். மழைக்காலங்களில் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய பொருட்கள் சேமிப்பு கிட்டங்கி அமைக்க வேண்டும்.
வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், குறிப்பாக வாழை, முருங்கை சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். 2023 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஸ்ரீவைகுண்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்டவை தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள்: 1,05,728
பெண்கள்: 1,08,535
இதரர்: 5
மொத்தம்: 2,14,268