“717-ல் எஞ்சிய 281 டாஸ்மாக் கடைகளை மூடுவது எப்போது?” - வேல்முருகன் கேள்வி

வேல்முருகன் | கோப்புப்படம்
வேல்முருகன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் மூட உத்தரவிடப்பட்ட 717 மதுபானக் கடைகளில் 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 281 கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என்றுதமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் சுமார் 4,765 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து, சென்னை மண்டலத்தில் 99 கடைகள், கோயம்புத்தூர் மண்டலத்தில் 173 கடைகள், மதுரை மண்டலத்தில் 281 கடைகள், சேலம் மண்டலத்தில் 80 கடைகள், திருச்சி மண்டலத்தில் 84 கடைகள் என மொத்தம் 717 அரசு மதுபானக் கடைகளை 15 நாட்களுக்குள் மூடப்படும் என தமிழக அரசு கடந்த 12-ம் தேதி அறிவித்தது.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்களின் போராட்டம் இவ்வளவு தீவிரமானதற்கு, குடிநோயாளியான கணவருக்காக மட்டுமல்ல, தன் மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்ற அச்சமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

அரசு உத்தரவிட்டு 15 நாட்கள் கடந்த நிலையில், தற்போது வரை 436 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, நாள்தோறும் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளையும், அருகாமையில் மற்றொரு கடை உள்ளதா என ஆய்வு செய்தும் அப்படிப்பட்ட கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.

அதாவது 60.81 சதவீத கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 39.19 சதவீத கடைகளை மூட வாய்ப்பில்லை என்றே டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்தகால ஆட்சியாளர்கள் மது வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயை முக்கியமாகக் கருதினர்.

இந்த ஆட்சி மது வணிக வருவாய்க்கு பதிலாக வேறு வழிகளில் வருவாயைப் பெருக்கிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக வருவாய் பெறும் வழிவகைகளை ஆய்வு செய்ய அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை பெறலாம்.எனவே, மீதமுள்ள 281 மதுபானக்கடைகளை அரசு எப்போது மூட உள்ளது என கேள்வி எழுப்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் | கோப்புப்படம்
10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in