

கோப்புப் படம்
நாகப்பட்டினம்: மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.2,500 வழங்குவது எப்போது என நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்துள்ளார்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று வந்திருந்தார். அப்போது அவர் பேராலயத்தில் பிரார்த்தனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தின் நிதிநிலை குறித்து இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக முழு அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து தணிக்கை அறிக்கைகளும் கேட்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை வட மாநில பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும்.
கடந்த 2024-ல் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தின்போது இத்தகைய விதிமுறைகள் எதுவும் இல்லை. எனவே ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றித் தான் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைவதற்கு முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு. இவ்வாறு அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.