

முதல்வர் விஜய் | கோப்புப் படம்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்துக்கு குழந்தைகளைப் பயன்படுத்தியதற்காக தனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது எனக் கூறி, தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் சென்னை உய ர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அந்த காரணத்துக்காக தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது.
தேர்தல் தொடர்புடைய நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டதா என்பதை தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் நிரூபிக்கவில்லை.
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிப்பதற்கான காரணமாக கருத முடியாது.
மேலும், தேர்தல் செலவு கணக்கையும், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றதையும் மறைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. யார் செலவு செய்தார்கள், எப்போது பணம் செலுத்தப்பட்டது என்பது போன்ற விவரங்கள் எதுவும் தேர்தல் வழக்குகளில் கூறப்படவில்லை.
வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என்றும் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.