திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை

திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை
Updated on
2 min read

விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகள் கழித்து இப்போது, முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. விசிக மற்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் 1967-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் தேதி பிறந்தவர் திருமாவளவன். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பும், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் படிப்பும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்த திருமாவளவனுக்கு தடயவியல் துறையில் பணி கிடைத்தது.

மதுரையில் பணியில் இருந்தபோது, ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் மலைச்சாமியுடன் இணைந்து செயல்பட தொடங்கினார். அப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார் திருமாவளவன்.

1990-ல் மலைச்சாமி படுகொலை செய்யப்பட, 1990-ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பின் மாநில அமைப்பாளராக திருமாவளவன் தேர்வானார். அமைப்புக்கு புதிய கொடியை அறிமுகப்படுத்திய அவர், 1991-ல் அந்த அமைப்பின் பெயரை ‘விடுதலை சிறுத்தைகள்’ என மாற்றினார்.

தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த 90-களில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு பல்வேறு போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியது. சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம் என்ற கொள்கையோடு தொடக்க காலங்களில் தமிழகம் முழுவதும் இந்த அமைப்பு பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

ஒரு கட்டத்தில் சாதி, மத அடையாளம் இல்லாமல் அனைவரும் தமிழில் பெயரிட வேண்டும் என்பதை ஒரு இயக்கமாகவே மாற்றினார் திருமாவளவன். இதனால் ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தூயத் தமிழ் பெயர்களை சூட்டிக்கொண்டனர். தன் தந்தையின் பெயரையும் இராமசாமி என்பதிலிருந்து, தொல்காப்பியன் என்று தமிழில் மாற்றினார். இதனால் இரா.திருமாவளவனாக இருந்தவர் தொல்.திருமாவளவன் ஆனார். தொடக்க காலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இணைந்து பல முன்னெடுப்புகளையும் இவர் செய்துள்ளார்.

அரசியல் இயக்கமாக இருந்த விடுதலை சிறுத்தைகளை, தேர்தல் பாதைக்கு கொண்டு வந்தவர் ஜி.கே.மூப்பனார். 1999 மக்களவைத் தேர்தலில் அவரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது விசிக. அந்த ஆண்டுதான் தனது அரசுப் பணியையும் திருமாவளவன் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் 2001-ல் திமுக - பாஜக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது விசிக. இதில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட திருமாவளவன் மட்டும் வென்றார். அவர் 2004ல் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

2004 மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து 8 தொகுதிகளில் அம்பு சின்னத்தில் போட்டியிட்ட விசிக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கோயில் மணி சின்னத்தில் 9 இடங்களில் விசிக போட்டியிட்டு இரு இடங்களில் வென்றது.

2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டது விசிக. அப்போது சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றிபெற்று முதன்முறையாக நாடாளுமன்றம் சென்றார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில், தொலைக்காட்சி பெட்டி மற்றும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னங்களில் போட்டியிட்ட விசிக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இதன்பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் 2 தொகுதிகளில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட விசிக, இரண்டிலும் தோற்றது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்க முக்கிய பங்காற்றினார் திருமாவளவன். இதில் இடதுசாரிகள், மதிமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அப்போது மோதிரம் சின்னத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. அப்போது காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், அதிமுக வேட்பாளரிடம் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிகவுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் பானை சின்னத்தில் சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவனும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமாரும் வென்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணியில் பானை சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது.

2024 மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு விசிக வெற்றிபெற்றது. இதன் காரணமாக விசிகவுக்கு அந்த தேர்தலில் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்தது.

1991-ல் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை உருவாக்கிய திருமாவளவன், கிட்டத்திட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றார். அக்கட்சியின் நிரந்தர சின்னமாக பானை மாறியது.

அதன்பின்னர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்தது விசிக. ஆனால் நீண்ட இழுபறிக்கு பின்னர் 8 தொகுதிகளை ஒதுக்கியது திமுக, அதில் இரு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து, தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. இதனையடுத்து தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிப்பதாக முதலில் அறிவித்த விசிக, இப்போது அமைச்சரவையில் இணைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான வன்னி அரசு இப்போது சமூக நீதித் துறை அமைச்சராகியுள்ளார்.

1999-ல் மூப்பனார் தலைமையில் முதன்முதலில் தேர்தலை சந்தித்த திருமாவளவன், அப்போதே ‘ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். திருமாவளவனின் அந்த முழக்கம், கால் நூற்றாண்டு கழித்து இப்போது முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் நிஜமாகியுள்ளது.

திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை
தவெக அமைச்சரவையில் விசிக: ஆ.ராசாவின் கண்டன ட்வீட்களால் சர்ச்சை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in