

விசிக தலைவர் திருமாவளவன்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் இருந்து, உழவர்கரை தொகுதியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. இந்நிலையில், இந்த தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரை காங்கிரஸ் தனது வேட்பாளராக நிறுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவின் ஆதரவு எம்எல்ஏவாக செயல்பட்ட இவர், கடந்த 10 நாட்களுக்கு முன் காங்கிரஸில் சேர்ந்தார்.
இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. அத்துடன் 4 தொகுதிகளில் தனியாக போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசிகவுக்கென உழவர்கரை தொகுதி ஒதுக்கப்பட்ட பிறகும் கூட தனது கட்சி வேட்பாளரை புதுவை காங்கிரஸ் வாபஸ் வாங்க மறுக்கிறது.
எனவே, விசிக வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஊசுடு தொகுதிக்கான வேட்பாளர் அரியபுத்ரி என்கிற அரிமாத் தமிழன், நெட்டப்பாக்கம் தொகுதிக்கு அமுதவன், உழவர்கரைக்கு செல்வ புஷ்பலதா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியின் ஏனாம் தொகுதி செயலாளர் மெல்லம் சீனிவாச ராவ் விசிக சார்பாக 4-வது தொகுதியில் போட்டியிடுகிறார்.