

ராமதாஸ்
சென்னை: தேர்தல் முடியும்வரை மாம்பழ சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த 2 இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ள சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட உத்தரவிட்டுள்ளது.
பாமகவின் மாம்பழ சின்னம் உள்ளிட்ட உள்கட்சி பிரச்சினை தொடர்பான ராமதாஸ் தரப்பு வழக்கை 3 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டிருந்தது. அதன்படி, பாமகவின் தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும். பாமகவின் பெயர், கொடி மற்றும் மாம்பழம் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
பாமக தொடர்பான உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக 2 இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, சென்னை பெருநகர 13-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி எம். தர்மபிரபு முன்பாக நடந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், “அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகே பாமகவின் அங்கீகாரம் ரத்து ஆனது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அன்புமணி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு்ள்ளார். மோசடியான ஆவணங்களை தயாரித்து அன்புமணி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றியுள்ளார்” என வாதிட்டார்.
பதிலுக்கு பாமக பொதுச் செயலாளரான வடிவேல் ராவணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “பாமகவின் தலைவராக தன்னை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ராமதாஸ் ஏற்கெனவே தலைவராக உள்ளார் என்றால் பிறகு எதற்காக மீண்டும் தன்னை தலைவராக அங்கீகரிக்கக் கோருகிறார். இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட முறையே தவறானது. ராமதாஸை சிலர் பின்புறத்தில் இருந்து தவறுதலாக இயக்கிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “இந்த வழக்கு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடைபெறும் குடும்ப பிரச்சினை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்கெனவே தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விட்டன என்பதால் இவர்கள் மனுவில் கோரியிருப்பது போல மாம்பழம் சி்ன்னத்தை முடக்க முடியாது. குறிப்பாக, புதுச்சேரியில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் முடிவடைந்துவிட்டது.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மேலும், அன்புமணி, ராமதாஸ் என்ற தனிப்பட்ட நபர்களை பார்த்து சின்னம் ஒதுக்கவில்லை. பாமக என்ற கட்சிக்கே மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.
அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத், “தந்தை, மகனுக்கு இடையில் நடைபெறும் பிரச்சினையை வைத்து சிலர் அரசியல் ரீதியாக ஆதாயம் தேட நினைக்கின்றனர், பாமக பதிவு பெற்ற கட்சி என்பதால் முறைப்படி மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாவிட்டால் வாக்காளர்களுக்கு வீண் குழப்பம் ஏற்படும்” என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.தர்மபிரபு நேற்றிரவு பிறப்பித்துள்ள தீர்ப்பில், “தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தரப்பி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 இடைக்கால மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
அதேநேரம் ராமதாஸ் இந்த கோரிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ளலாம். அதேபோல, நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் இடையீட்டு மனுதாரராக கட்சியின் பொதுச் செயலாளரான வடிவேல் ராவணனை இணைக்க வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படுகிறது. அன்புமணிக்கு மாம்பழம் சி்ன்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் 3 நாட்களில் இந்த வழக்கில் தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தியிருந்த நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.தர்மபிரபு 2 நாட்களில் தீர்வு கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.