

கீர்த்தனா
சிவகாசி: விருதுநகர் தொகுதியின் வேட்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த கீர்த்தனா, சிவகாசியின் தவெக வேட்பாளராக களமிறங்கி, அந்தத் தொகுதியின் முதல் பெண் எம்.எல்.ஏ.வாக தேர்வானதுடன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் ‘விருதை மகள்’ கீர்த்தனா என்ற அடைமொழி உடன் 2026 ஜனவரி 1 முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிரதானக் கட்சிகளை எதிர்த்து விருதுநகர் தொகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்தார். அடிப்படை பிரச்சினைகள், நிறைவேற்றப்படாத அறிவிப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி மக்களின் அறிமுகத்தைப் பெற்றார்.
விருதுநகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கப் போவதாகக் கூறி வந்த கீர்த்தனா, திடீரென தவெகவில் இணைந்தார். மறுநாளே கீர்த்தனா சிவகாசி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட கீர்த்தனா சமூக வலைதளங்கள் மூலமாக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். வெளியூர் வேட்பாளர் என்ற விமர்சனத்தை பின்னுக்குத் தள்ளி சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.
1957-ல் உருவாக்கப்பட்ட சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக 5 முறை, காங்கிரஸ் 3 முறை, தமாகா 2 முறை, திமுக 2 முறை, மதிமுக, சுதந்திரா கட்சி, ஜனதா கட்சி ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
இதுவரை சிவகாசி தொகுதியில் ஒருமுறைகூட பெண் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதில்லை. தற்போது சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று, அந்தத் தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக தேர்வாகி ஆச்சரியப்படுத்தியுடன், தவெக அரசில் அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற கீர்த்தனா, “நன்றி சிவகாசி மக்களே! என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை, சிறந்த பணிகளின் மூலம் நிச்சயமாக நிறைவேற்றுவேன். முதல்வர் விஜய் கூறியது போல, “வளர்ச்சிக்கான காலம் இப்போது தொடங்கியுள்ளது!” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.