

சென்னை: “பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதா?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா?
அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.