

பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீனவர்கள் மற்றும் பெண்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: சுனாமி நினைவு தினம் நேற்று 21-ம் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது. அதை யொட்டி மெரினா மற்றும் காசிமேடு கடற்கரை பகுதிகளில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக மீனவரணி சார்பில் அணியின் துணைத் தலைவர் கே.பி.சங்கர் தலைமையில் திருவொற்றியூர் கடலோரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாவட்டச் செயலாளர் சுதர்சனம் உள்ளிட்டோர் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அதிமுக சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மீன்பிடி படகில் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். கட்சியின் அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன் தலைமையிலும், பாஜக சார்பில் சீனிவாசபுரம் கடற்கரையில் மாநில துணைத் தலைவர் குஷ்பு, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும், அமமுக சார்பில், துணைப்பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் தலைமையிலும் பால் ஊற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.