

சென்னை: நாடு முழுவதும் தீவிர கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஜூன் 28) நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகில் உள்ள சொட்டு மருந்து மையத்துக்குச் சென்று, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம்.
போலியோ சொட்டு மருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது. சென்னை மாநகரில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,641 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக மாநகராட்சி நகர சமுதாய நல்வாழ்வு மையங்கள், நகர ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றில் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முகாம்கள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை தொடர்ந்து நடைபெறும். இப்பணியில் 6,564 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளை, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நேரில் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார்.