

சென்னை: வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது.
இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 11) ஒருசில இடங்களிலும், 12 முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 15-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் 12-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், 13-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
14, 15 தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 17 செமீ, நாலுமுக்கில் 16 செமீ, காக்காச்சியில் 15 செமீ, தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் 14 செமீ, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 13 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 8 செமீ, ராமேசுவரம், கோவை வேளாண் பல்கலைக்கழகம், பாம்பன், சென்னை சைதாப்பேட்டையில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.