

சென்னை: அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணமாக ஜிபிஎஃப் தொகையில் எடுப்பதற்கான வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் செலுத்த வேண்டும். விரும்பினால் கூடுதல் பங்களிப்பும் செலுத்திக் கொள்ளலாம்.
ஜிபிஎஃப் கணக்குத் தொகையில் இருந்து கல்வி, மருத்துவம், திருமணம், வீடு கட்டுதல் உள்பட பல்வேறு தேவைகளுக்காக குறிப்பிட்ட தொகையை முன்பணமாக (அட்வான்ஸ்) எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் வீடு கட்ட முன்பணமாக அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை பெறலாம்.
இந்நிலையில், இந்த வரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற் கான அரசாணையை நிதித்துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ளார்.