கோப்புப்படம்
சேலம், நெல்லை உள்ளிட்ட 30 ரயில் நிலையங்களில் ‘ஏசி’ காத்திருப்பு அறைகள்
சென்னை: கோடை வெயில் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் திருவாரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம் உட்பட 30 ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறைகள் திறக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் பயணிகள் வருகை அதிகமாக உள்ள ரயில் நிலையங்களில், பயணிகளுக்கான குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத காத்திருப்போர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, ரங்கம், காரைக்குடி, ராமேசுவரம், பழனி ஆகிய ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருவாரூர், திருநெல்வேலி உள்பட 30 ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிகள் தீவிரம்: இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் வருகை அதிகமாக உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு, ஓய்வு அறைகள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருவாரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், மயிலாடுதுறை உட்பட 30 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அறைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பணிகள் முடிவடைந்ததும் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
