

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்.6-ம் தேதி நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 7-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 5,139 மனுக்கள் ஏற்கப்பட்டன. முறையாக பூர்த்தி செய்யப்படாத 2 460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதையடுத்து, நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 234 தொகுதிகளிலும் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து நேற்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதியாகியுள்ள நிலையில், அத்தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. அடுத்த சில தினங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
அதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கிடப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒவ்வொன்றிலும் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம்பெறும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதற்கு மேல் இருந்தால் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். அதிகபட்சமாக 4 அலகுகளை சேர்க்க முடியும். அவற்றில் 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பொத்தான் இடம்பெறும்.
ஏற்கெனவே, தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகள் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ளன. அதற்கான பெயர், சின்னங்களை அச்சிடும் பணிகளும் இன்று தொடங்குகின்றன.
இந்த தேர்தலில் 2,80,30,658 ஆண், 2,93,04,905 பெண், 7,728 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது. 17-ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இத்தேர்தலில் சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள 151 செலவின பார்வையாளர்களும், வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்களை வீடியோவில் பதிவு செய்து, செலவினத்தை மதிப்பிட்டு வருகின்றனர். அவற்றை, வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கும் பணிகளை இன்றுமுதல் தீவிரப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.