

மதுரை: ‘திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உள்நோக்கத்துடன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாங்கள் விரும்பும் இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்து முன்னணியின் நோக்கம். இதனை மனுதாரர் வாயிலாக நிறைவேற்ற இந்து முன்னணி முயன்றுள்ளது’ என்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ‘மலை உச்சியில் இருப்பது தீபத்துண் அல்ல... சர்வே தூண் தான்’ என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் கோயில், செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று (டிச.12) காலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் ஜெயசந்திரன், ராம கிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வழக்கு வந்தபோது, இவ்விவகாரத்தில் மேலும் சில இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அந்த இடையீட்டு மனுக்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேல்முறையீடு மற்றும் இடைக்கால மனுக்கள் விசாரணை ஏற்கப்பட்டுள்ளதால் புதிய மனுக்களை ஏற்க முடியாது எனக் கூறினர்.
மேலும், வழக்கில் தீர்வு காண வேண்டும் என்றால், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
அரசு தரப்பு வாதம்: தொடர்ந்து அரசு தரப்பு வாதத்தில், ‘திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த 73 ஆண்டுகலாகவே உச்சி பிள்ளையர் கோயிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதில் எந்தப் பிரச்சினையும் எழுப்பப்படவில்லை. இது தொடர்பாக முன்னதாக நடைபெற்ற வழக்குகளில் கிடைத்த தீர்ப்புகளும் உள்ளன.
இவற்றை கருத்தில் கொள்ளாமல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் வேறு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூண் அல்ல; அது எல்லை கல்லாக குறிப்பிடப்படுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத நல்லிணக்கம், பொது அமைதியை பாதுகாக்கும் வகையிலேயே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் 1994-ம் ஆண்டுக்கு பிறகு தான் இப்பிரச்சினை எழுந்தது. பின்னர் நீதிமன்றம் சென்று 2014-ம் ஆண்டு உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அறநிலையத் துறை சார்பில் காத்திகை தீப நாட்களில் உச்சி பிள்ளையார் கோயில் அருகே விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்து முன்னணியின் நோக்கம். இதனை மனுதாரர் வாயிலாக நிறைவேற்ற இந்து முன்னணி முயன்றுள்ளது.
இப்பிரச்சினை பெரிதாகியுள்ளதால், மக்களின் நலன் கருத்தி மாநில அரசு சில நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு இம்மனுவை நீதிமன்றம் அனுக வேண்டும்’ என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இன்றைய விசாரணையின்போது நீதிபதிகள் “திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், “மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் தான். மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவுக்கு சொந்தமானது. மற்றவை கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது” என்று தெரிவிக்கப்பட்டது.