

பழநி: தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4-ம் தேதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என்று நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் வெள்ளிக்கிழமை (மே 1) பழநிக்கு வந்தனர்.
பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் (வின்ச்) மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற அவர்கள், அங்கு வைதீகாள் அலங்காரத்தில் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர், ஆனந்த விநாயகர் சந்நிதி, போகர் ஜீவ சாமதி ஆகிய இடங்களுக்கும் சென்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மீண்டும் வின்ச் ரயில் மூலம் அடிவாரத்துக்கு வந்து, காரில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர்.சி, “சித்ரா பவுர்ணமி நாளில் முருகனை தரிசிப்பதற்காக பழநி வந்திருக்கேன். பழநி எனக்கு சொந்த ஊர். முருகன் எனக்கு குலதெய்வம். அதனால் அடிக்கடி பழநி வருவேன். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது.
தேர்தல் கருத்து கணிப்பை விட, மே 4-ம் தேதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம். அதன் பிறகு பேசலாம்” என தெரிவித்தார். மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் சுந்தர் சி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.