தங்க தமிழ்ச்செல்வன்
“திமுகவில் ஓபிஎஸ் இணைந்தால் மகிழ்ச்சி” - தங்க தமிழ்ச்செல்வன்
கம்பம்: “திமுகவில் ஓபிஎஸ் இணைந்தால் மகிழ்ச்சி” என்று தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் பகுதியில் உலக தாய்மொழி தினவிழா நடைபெற்றது. பெரியகுளம் அரசு ரத்த வங்கி மற்றும் துணிந்து நில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்ததானம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனத்துக்கு மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வராக இருந்தவர். அவர் மாற்று கட்சியைச் சேர்ந்த தமிழக முதல்வரை வாழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் திமுகவில் இணைந்தால் மிகவும் சந்தோஷம்” என்று அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் ஆகியோர் எதிர் எதிர் துருவங்களாக இருந்தவர்கள். இந்நிலையில், அங்கிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து தற்போது எம்பி.யாக உள்ளார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை திமுகவுக்கு வரவேற்கும் விதமாக கருத்து கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
