

மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தர் சிலையை வழங்கினார்
நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தர் சிலையை வழங்கினார்.
கூட்டத்தில் தேஜஸ்வி பேசியதாவது: தமிழ்நாட்டில் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் அரசியலுக்கு இலக்கணமாக இருந்தவர்கள். அந்த வழியில் மு.க.ஸ்டாலின் சமூகநீதி அரசாங்கத்தை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். ஜனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல. அரசாங்கம் எப்போதும் ஏழை, எளியவர்களுக்கானதாக இருக்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமைக்கு தமிழ்நாடு எடுத்துக்காட்டாக உள்ளது. தரமான கல்விக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுமுன்னுதாரணமாக இருக்கிறது. கருணாநிதி, ஸ்டாலினின் அர்ப்பணிப்பு, அயராத முயற்சிகளால் இன்றைக்கு தமிழகம், இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக உள்ளது. சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.
கல்வி, சுகாதாரம், தனிநபர் வருவாயில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. சமூகநீதி, சமூகக் கட்டமைப்பு மற்றும்மனிதநேயம் தான் அரசாங்கத்தின் அடிநாதம். மக்களவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத்தை, அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆசியுடன் வெற்றிகரமாக தோற்கடித்துள்ளோம். இது நமது முக்கியமான வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.