

பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: திட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதால், தவெகவை ‘தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்வை செப்.17 முதல் அக்.17 வரை கொண்டாட இருக்கிறோம். இதற்காக ரத்த தான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்தம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிற அரசியல்வாதிகள் மத்தியில் ரத்தம் கொடுக்கின்ற அரசியல்வாதிகளாக பாஜகவினர் உள்ளனர்.
பட்டினப்பாக்கம் மீனவர்களின் பட்டினம். அங்கு தலைமைச் செயலகம் கட்டக்கூடாது. இதை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போதைய சூழலில், தலைமைச் செயலகம் வேண்டுமா என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.
லண்டனில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதல்வர் சொல்கிறார். அவர் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்தாரா அல்லது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்த்தாரா என்பது தெரியவில்லை.
எனவே, எந்தெந்த நிறுவனங்கள் உண்மையிலேயே தமிழகத்தில் முதலீடுகளை செய்ய இருக்கின்றன என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்.
திரைக்கதைக்கு வேண்டுமானால், மாற்றி மாற்றி ஸ்கிரிப்ட் எழுதலாம். ஆனால், ஆட்சியில் தவறான ஸ்கிரிப்ட் எழுதக் கூடாது. தவெக என்றால், தள்ளிப்போடும் வெற்றிக் கழகம். ஏனென்றால், முதல்வரின் தங்க மோதிரம் திட்டம் தள்ளிப்போகிறது.
காமராஜர் பெயரில் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் தள்ளிப் போகிறது. விமான நிலையம் வளர்ச்சி தள்ளிப்போகிறது. இதுதான் தவெக அரசின் இன்றைய நிலை. இவ்வாறு அவர் கூறினார்.