“தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - மாநிலங்களவையில் கமல்ஹாசன் முதல் பேச்சு

'உயிரோடு இருப்போரின் மரண வாக்குமூலம்' என எஸ்ஐஆர் குறித்து சாடல்
“தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - மாநிலங்களவையில் கமல்ஹாசன் முதல் பேச்சு
Updated on
3 min read

புதுடெல்லி: “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது” என்று மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. பேசினார்.

இன்று மாநிலங்களவையில் முதன்முறையாக கமல்ஹாசன் பேசினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான்.

இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா.

எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. 'துரை' (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன்.

இந்த உரையை ஒரு துளி கோபமும் இல்லாமல் எழுதுவதற்கு மகாத்மா காந்தி எனக்கு உதவினார். தர்க்க ரீதியான வாதங்களை முன்வைக்க தந்தை பெரியார் எனக்கு உதவினார். இந்த மாபெரும் ஜனநாயகக் கட்டிடத்தின் மாண்பைப் புரிந்து கொள்ள அண்ணா எனக்கு உதவினார்.

உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள்.

இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை 'உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்' என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால், தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

'ஸ்பெல்' என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. 'EC' என்றால் 'ஆங்கிலப் பயிற்சியாளர்கள்' (English Coaches) என்று அர்த்தமல்ல. பிஹார் ஏற்கெனவே பல 'வாழும் பிணங்களின்' (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது.

இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. மேற்கு வங்கத்தை சேர்ந்த எனது சகோதரியும் இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி 'வாழும் பிணங்கள்' காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்த அவையில் நான் பேசும் வார்த்தைகள் உங்களில் சிலருக்குக் காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மேலும், நான் கடவுளை நோக்கி கைகூப்பப் போவது கிடையாது. எனது பகுத்தறிவு மூளை கடவுள் என்ற பிம்பத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அப்புறப்படுத்திவிட்டது” என்று பேசினார்.

தொடர்ந்து தமிழில் பேசிய அவர், “பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்" என்று கமல்ஹாசன் எம்.பி. பேசினார்.

“தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - மாநிலங்களவையில் கமல்ஹாசன் முதல் பேச்சு
எப்ஸ்டீன் கோப்புகளின் தாக்கத்தால் ட்ரம்ப்பும் மோடியும் எடுக்கும் முடிவுகளால் இந்தியா அதிர்ச்சி: திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in