

சென்னை: மோசடி, குற்றச்சதி போன்ற குற்றச்சாட்டுகளுக்குள்ளான அதிகாரிகள் மீது எடுக்கப்படும் தற்காலிக இடைநீக்க உத்தரவுக்கு தடை விதித்து மீண்டும் அந்த அதிகாரியையே பணியாற்ற அனுமதித்தால் துறைரீதியில் நடத்தப்படும் விசாரணையின் புனிதம் கெட்டுவிடும், அந்த விசாரணையே அர்த்தமற்றதாகிப் போய்விடும் எனக் கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருப்பத்தூர் மாவட்ட பதிவாளரின் இடைநீக்க உத்தரவுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பத்திரப்பதிவுத் துறையில் சமீபத்தில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட பதிவாளர்களை தற்காலிக இடைநீக்கம் செய்து பத்திரப்பதிவுத் துறை தலைவர் நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் தனக்கு எதிரான தற்காலிக இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி, திருப்பத்துார் மாவட்ட பதிவாளரான செந்துார் பாண்டியன் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதி்த்திருந்தார்.
இந்த தடையை நீக்கக்கோரி தமிழக பத்திரப்பதிவுத் துறை செயலரும், பதிவுத்துறைத் தலைவரும் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்காலிக இடைநீக்கம் என்பது தண்டனை அல்ல.
குற்றச்சாட்டு குறித்த விசாரணையின்போது சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்ந்து பதவியில் நீடிக்கா வண்ணம் தற்காலிகமாக அவரை பதவியில் இருந்து விலக்கி வைப்பதற்காக எடுக்கப்படும் துறை சார்ந்த நடவடிக்கையே. இதுபோன்ற உத்தரவுகளில் நீதிமன்றங்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகள் மீதான இடைநீக்க உத்தரவுக்கு தடை விதித்து அவரையே பணியாற்ற அனுமதித்தால் துறை ரீதியில் நடத்தப்படும் விசாரணையின் புனிதம் கெட்டுவிடுவதுடன் மட்டுமின்றி அந்த விசாரணையே அர்த்தமற்றதாகிவிடும் எனக் கருத்து தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்ட பதிவாளரின் இடைநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.