

அன்புமணியைத் தொடர்ந்து அவரது மனைவி சவுமியா, ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தை’ காஞ்சிபுரத்தில் இருந்து இன்று தொடங்குகிறார்.
பாமக தலைவர் அன்புமணி, ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 108 நாட்கள் பயணம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தற்போது பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி, அவரது மனைவி சவுமியா அன்புமணி தமிழகம் முழுவதும் ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்’ மேற்கொள்ள இருக்கிறார். பாமகவின் துணை அமைப்பான பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவராக உள்ள சவுமியா அன்புமணி, காஞ்சிபுரத்தில் இருந்து தன்னுடைய பயணத்தை இன்று தொடங்குகிறார்.
தமிழகத்தில் பெண்களுக்கு கிடைக்காமல் உள்ள 10 முக்கிய உரிமைகளைப் பெறுவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரமாக இந்த பயணம் அமையும் என்று பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாரத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பு, மதுவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பெண்களின் உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, போதைப் பொருளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை, கல்வியும் பயிற்சியும், பெண்களின் உரிமை, உணவு, வீட்டு வசதி, குடிநீர், துப்புரவு வசதி, மருத்துவ சேவைகள், பெண்களின் உரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம், பெண்களின் உரிமை, அடிப்படை சேவைக்கான உரிமை, சமூக பாதுகாப்பு பெண்களின் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்புக்கான உரிமை ஆகிய 10 உரிமைகளை முன்வைத்து சவுமியா இந்த பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறார்.