

சம்ஸ்கார் பாரதி சென்னை மாநகர் அமைப்பு சார்பில், சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் மேடை நாடக கலைஞர்கள் டி.கே.எஸ்.கலைவாணன், பாம்பே ஞானம் ஆகியோரை திரைப்பட நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். தமிழ்நாடு-கேரளா ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் பா.பிரகாஷ், மாநில கவுரவத் தலைவர் நாராயபட், மாநகரத் தலைவர் செல்லா வைத்தியநாதன். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில இலக்கியப் பிரிவு பொறுப்பாளார் பத்மா மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
படம்: ம.பிரபு
சென்னை: குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் உள்பட பஞ்ச பரிவர்த்தன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழ்நாடு- கேரளா பொறுப்பாளர் பா.பிரகாஷ் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் சம்ஸ்கார் பாரதி இயக்கம் (சென்னை மாநகர்) சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், ஆர்எஸ்எஸ் தமிழ்நாடு- கேரளா பொறுப்பாளர் பா.பிரகாஷ் ஆகியோரும், சமஸ்கார் பாரதி இயக்கத்தின் மாநில தலைவர் தாட்சாயணி ராமச்சந்திரன், மாநகர தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் டி.கே.எஸ். கலைவாணன், பாம்பே ஞானம் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த விழாவில், பா.பிரகாஷ் பேசும்போது, “சம்ஸ்கார் பாரதி இயக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள கலைகளை ஒன்றிணைத்து அதன் மூலம் சமூக ஒற்றுமையை உருவாக்கும் பணியை சம்ஸ்கார் பாரதி செய்து வருகிறது. தமிழகம் கலைகளின் வளமான பூமியாகும். எனவே, இச்சமூகத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், ‘பஞ்ச பரிவர்த்தன்’ எனப்படும் 5 முக்கிய விஷயங்களை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதாவது, குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் - பாதுகாப்பு, தாய்மொழியில் பேசுதல், குடிமக்கள் கடமைகள் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இந்த ஐந்து விஷயங்களையும் முதலில் நமது வாழ்க்கையில் பழக்கப்படுத்த வேண்டும். பின்னர் குடும்பத்தினரிடமும், அதன் மூலம் சமூகத்திலும் இந்த நடைமுறைகளை கொண்டு வர வேண்டும். அதன்படி தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் அனைவரும் ஒன்றிணைந்து செய்து வந்தால் இந்தியாவில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்றார்.
விழாவில் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “சினிமாவில் சம்பாதித்த பிறகு விலகுவதுபோல் நாடகக் கலைஞர்கள் விலகுவதில்லை. கலைக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்தான் நாடகக் கலைஞர்கள். எனவே, சம்ஸ்கார பாரதி போன்ற அமைப்புகள் நாடகக் கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். கலைஞர்களுக்கு திறமையுடன் பணிவு, எளிமை ஆகியவையும் அவசியம்.
‘எல்லாம் தெரிந்துவிட்டது, எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம்’ என்ற எண்ணம் வந்துவிட்டால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது. தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருக்க வேண்டும். நமது இந்து கலாச்சாரம், சனாதன தர்மத்தின் நல்ல கருத்துகளை மறந்துவிடக் கூடாது. விமர்சனங்கள், சர்ச்சைகளை விட்டுவிட்டு நல்ல விஷயங்களைப் பேச வேண்டும்” என்றார்.