வாக்குச்சாவடி, அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் இன்று எஸ்ஐஆர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படும்
சென்னை: மாநகராட்சி சார்பில் வாக்குச்சாவடி மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களில் இன்று காலை 8 முதல் இரவு 8 மணி வரை எஸ்ஐஆர் சிறப்பு உதவி மையங்கள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்ஐஆர் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணவும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், கடந்த நவ.18 முதல் 25-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைத்து பெரும்பாலான படிவங்கள் பெறப்பட்டன.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற குறைந்த நாட்களே உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகளில் ஒரு சிறப்பு நடவடிக்கையாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீளப்பெறும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்கள், அதிக வாக்காளர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் பன்முக வளாக குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பு உதவி மையங்கள், இன்று காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படும்.
எனவே, வாக்காளர்கள் இந்த சிறப்பு வாக்காளர் உதவி மையத்தை பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விரைந்து வழங்க வேண்டும்.
