விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே? - செங்கோட்டையன் தகவல்
கோவை: விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு குறித்து இன்று மாலை விஜய்யுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக, தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் களத்தில் இருக்கின்றோமா, இல்லையா என்பதற்கு தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும் என பாஜகவுக்கு அவர் பதிலடியும் கொடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எஸ்ஐஆர் குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும்.
ஈரோட்டில் நடந்த பொதுகூட்டத்துக்குப் பின்னர், ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை சொல்கின்றனர், அதுபோல அமைச்சர் சேகர்பாபு, எங்களை தவழும் குழந்தை என்று சொல்லி இருக்கிறார். தவழும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம் தான் தன்னுடைய தன்னாட்சி நடத்துவார்கள்.
தமிழக வெற்றி கழகம் களத்தில் இல்லாத கட்சி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து இருப்பது அவருடைய கருத்து. களத்தில் இருக்கின்றோமா, இல்லையா, என்பதற்கு தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும்.
தவெகவின் அடுத்த பொது கூட்டம் குறித்த கேள்விக்கு, இன்று மாலை விஜய் உடன் பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம்.
எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
