

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே.
கோவை: தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்க விஜய்யின் ஆதரவை கோருவோம் என, மத்திய சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் துறை இணை அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குடியரசு துணைத்தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அநீதிகளைத்தடுக்க, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் நலனுக்காக பழனிசாமி ஆட்சி நடத்துவார்.
திமுகவை போல் குடும்பத்துக்காக ஆட்சி நடத்தமாட்டார். வரும் தேர்தலில் திமுக வீழ்த்தப்படும். தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எம்ஜிஆர், என்டிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் விஜய் மிகவும் பிரபலமான நடிகராகத் திகழ்கிறார்.
தமிழக அரசியலில், தமிழக வெற்றிக் கழகத்துடன் தற்போது வரை பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒருவேளை விஜய் தொகுதிகளைக் கைப்பற்றினால், ஆட்சி அமைக்க அவரது ஆதரவை கோருவோம்.
தமிழகத்தில் விஜய் அதிக வாக்குகளைப் பெறுவார். திமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பார். தங்களது இலக்கு தனிப்பெரும்பான்மை என்றாலும், கூட்டணியை வலுப்படுத்த விஜய்யை வரவேற்போம்.
முத்ரா யோஜனா மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவருடனும் இணைந்து, அனைவரின் வளர்ச்சி’ என்ற முழக்கம் தமிழக மக்களிடம் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.