

சென்னை: தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 11 வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில், ஜூன் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், 24 இடங்கள் காலியாகின்றன. அதோடு, மகாராஷ்டிராவிலும் மாநிலங்களவை பதவியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனேத்ரா அஜித் பவார் ராஜினாமா செய்திருந்தார். இந்த காலியிடங்களுக்கும் ஜூன் 18 இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.