

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி பலத்துடன் களமிறங்கிய ஆளுங்கட்சியான திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் 14 அமைச்சர்கள் தோல்வியடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் காங்கிரஸ் கைகோத்துள்ளது.
இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தேர்தலில் வென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தொடர்ந்து தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வெற்றிக்கு ஸ்டாலின்தான் காரணம். ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அப்போது நீங்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு வர வேண்டுமென கூறினேன். இதற்காக நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியில் கூட ராஜினாமா செய்கிறேன் என்றேன். ஆனால் அவரோ, அப்படியெல்லாம் பேசக்கூடாது எனக் கூறிவிட்டார். தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றுவேன்” என்று தெரிவித்தார்.
இதுதவிர நடிகர் ரஜினிகாந்த், ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, ``நெருங்கிய நண்பரான தங்களின் வெற்றி நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பேன்'' என்று அவரிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் ஸ்டாலினை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.