

சென்னை: தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் சென்றது திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகம் என்று அந்த கட்சியின் பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியான அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியுள்ளது. எப்போதெல்லாம் காங்கிரசுக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திமுக. அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால், அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம். இன்று கூட்டணி முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறியதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்களை பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்குச் சென்றுள்ளனர். பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போல அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயல்கிறது. இது திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.
குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பாஜக பல்வேறு மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் செய்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுக. தோல்வி எங்களுக்கு புதிதல்ல, துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல, ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும். காலம் பதில் சொல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுகில் குத்தும் செயல்: தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது. இப்படி ஒரு முடிவை எடுத்தமைக்காக அவர்கள் வருந்த நேரிடும். தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருநாள்தான் ஆகிறது. அதற்குள் காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது முதுகில் குத்தும் செயலாகும். பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு இடம்தர விரும்பாததால், இந்த முடிவை எடுப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் இந்த முடிவு இண்டியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் செயல்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மிகத் தவறான ஒரு முடிவை எடுத்துவிட்டதாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.