

எம்.பி ஜெகத்ரட்சகன் | கோப்புப் படம்
புதுச்சேரி: “முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல, வழக்கமானதுதான்” என்று திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் குறிப்பிட்டார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு பிறகு திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முழுமையாக பணியாற்றுவோம்.
காங்கிரஸுடன் தவெக கூட்டணி சேர்ந்திருப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தட்டாஞ்சாவடியில் உள்ள 26 ஆயிரம் வாக்காளர்களுடன் தான் எங்கள் கூட்டணி. இதைவிட பெரிய கூட்டணி தேவையா? புதுச்சேரியில் பெரிய மாற்றத்தை உருவாக்கி விடுவோம். ஸ்டாலின், உதயநிதி பிரச்சாரத்துக்கு எப்போது வருவார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் திமுகவுக்கு மக்கள் அமோக ஆதரவு தருகின்றனர். எதிரணியினரை எதற்கு ராஜினாமா செய்தீர்கள் என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல, வழக்கமானதுதான். திமுக எல்லாவற்றையும் பார்த்து விட்டது. திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. பல சோதனைகளை பார்த்து விட்டோம். மிசாவையை பார்த்து விட்டோம். அதைவிடவா இதெல்லாம்” என்றார்.