வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை

புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை
Updated on
1 min read

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ‘க்யூஆர் கோடு’ அடிப்படையிலான அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணிக்கை அலுவலர்கள், உதவியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சம்பந்தமில்லாத நபர்கள் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பை வலுப்படுத்த ‘க்யூஆர்’ குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தவிர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் இசிஐ நெட்-ல் ‘க்யூஆர் கோடு’ குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. இதிலிருந்து இம்முறையானது அமல்படுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் நீட்டிக்கப்படும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில், தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில், ‘க்யூஆர்’ குறியீடு சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.

‘க்யூஆர்’ குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் வசதிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகில் ஒரு ஊடக மையம் அமைக்கப்படும். அவர்களுக்கு நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள் தொடர்ந்து வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கு, இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ‘க்யூஆர் கோடு’ அடையாள அட்டை
உழைப்பின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் ‘மே தினம்’ - அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in