

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43,051 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 50 லட்சம் பேருக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னை பாலவாக்கத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து, போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதன்பிறகு, போலியோ பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உட்பட மொத்தம் 43,051 மையங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியும், அவர்களுக்கு பிடித்த ‘டெடி பியர்’ பொம்மைகளை பரிசாக கொடுத்தும் போலியோ சொட்டு மருந்துமுகாமைத் தொடங்கி வைத்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், துறைச் செயலர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் சோமசுந்தரம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். அழுது அடம்பிடித்த குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியும், சாக்லேட், பொம்மைகள் வழங்கியும் மருந்து வழங்கப்பட்டது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தொலைதூரம் மற்றும் எளிதில் வந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு நடமாடும் குழுவினர் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர். இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
பிற மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் மருந்து வழங்கப்பட்டது. விடுபடும் குழந்தைகளை அடையாளம் காண, சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் 5 வயதுக்கு உட்பட்ட 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,646 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பணியில் 6,564 பேர் ஈடுபட்டனர்.
சென்னையில் 5 லட்சம் குழந்தைகள் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்குள் செவிலியர்கள் வீடு வீடாக வந்து சொட்டு மருந்து வழங்குவார்கள். இன்றும், நாளையும் தற்காலிக மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.