

“நாங்க ரெண்டு பேரும் இணைபிரியா சகோதரிகளாகி விட்டோம்” என்று அவார்டு நகர் மாவட்ட மாண்புமிகுக்கள் இருவரும் வாய்ப்பேச்சுக்கு சொன்னாலும் உள்ளாற உஷ்ணம் குறையாமல்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் பஞ்சாயத்து வராமல் இருப்பதற்காகவே சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இவர்களையே மாவட்டச் செயலாளர்களாக்கியது பனையூர் தலைமை.
இவர்களுக்காகவே, 7 தொகுதிகள் கொண்ட இந்த மாவட்டம் இப்போது 5 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போலவே தன்னையும் தனது தொகுதிக்கு மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என மெனக்கிடுகிறாராம் பால்கோவா தொகுதியின் கந்தனுக்கு மறுபெயரைக் கொண்ட விசில் எம்எல்ஏ.
இந்தப் பிளானுடன் அண்மையில் கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கூட்டம் போட்டவர், அனைவருக்கும் கை மணக்க வாய் மணக்க மதிய விருந்தை போட்டுவிட்டு அத்தனை பேரிடமும் எதுவுமே சொல்லாமல் மினிட் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினாராம். அதை வைத்துக் கொண்டு, தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்று தனது தொகுதி சார்ந்த நிர்வாகிகள் தீர்மானமே நிறைவேற்றி இருப்பதாக எழுதி தலைமைக்கு தெரியப்படுத்தி விட்டாராம். இதனைத் தொடர்ந்து, “நமக்குத்தான் மாவட்டச் செயலாளர் பதவி வர்ற மாதிரி இருக்கு” என்று இப்போது ஊருக்குள் பிரச்சாரம் செய்து வருகிறாராம்.