

‘பழக்’ கட்சியின் தட்பவெப்ப நிலை தடாலடியாக மாற ஆரம்பித்திருக்கிறது. ‘விட்டேனா பார்’ என வீராப்பு யுத்தம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவும், பிள்ளையும் அன்பொழுக கட்டித் தழுவி கண்ணீர் உகுத்திருக்கிறார்கள்.
“இனி நல்லது நடக்கும்” என்று மகன் மனநிறைவுடன் சொல்லி இருக்கிறார். தங்களது திருமண நாளில், பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும் என பிரயாசைப்பட்ட ‘அம்மா’தான் அதற்கான முயற்சிகளை எடுத்தாராம். அம்மா அழைத்ததும் மகனும் தம்பதி சமேதராய் புறப்பட்டு வந்துவிட்டாராம்.
ஆனால், பெரியவரால் கட்சிப் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்ட ‘மதி’ மகள் இந்த சந்திப்பின்போது தோட்டத்து வீட்டில் இல்லையாம். இத்தனைக்கும், வீடு தேடி வந்த மகனும், இவரும் சம்பந்தி உறவுமுறை வேறு. வலுக்கட்டாயமாக கட்சிப் பதவியில் அமரவைக்கப்பட்ட தான் எம்.பி., எம்எல்ஏ ஆகாமல் ஓயப்போவதில்லை என்ற திட்டத்தில் இருக்கிறாராம் ‘மதி’ மகள்.
தனக்கு இப்படியொரு அதிகாரக் கனவு இருக்க, அப்பாவும் பிள்ளையும் ராசியாகிவிட்டால் தனது எதிர்பார்ப்பு கனவாகவே முடிந்துவிடும் என கவலைப்படுகிறாராம் மகள். அதனால்தான் ‘சம்பந்தி’ வந்தபோது தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக தோட்டத்து வீட்டில் இருந்து எக்ஸிட் ஆகியிருந்தாராம்.