

‘தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக கூட்டத்துடன் கூட்டமாக ராஜினாமா செய்யாமல் தனி ஆளாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் ‘கோட்டை’ மாவட்ட இலைக் கட்சியின் முன்னாள் மாண்புமிகுவான விஜயமானவர்.
எடக்கானவரின் கடிதம் தொடர்பாக சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவுக்காகவும் ராஜினாமா முடிவை ஒத்திவைத்திருந்தவர், அதற்கு முன்னதாக தொகுதி மக்களிடம் கருத்துக் கேட்கப் போகிறேன் என்று ஒரு ரீல் போட்டார்.
அடுத்தகட்டமாக, ‘கோட்டை’ மாவட்டத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் பார்ட் பார்ட்டாக குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று துள்ளிக் ‘குளிக்க’ வைத்தார். அவர்களுக்கு விருந்து சமைப்பதற்காக ‘கோட்டை’யில் இருந்தே ஆட்டுக் கடாக்களும் குற்றாலப் பயணம் மேற்கொண்டன.
ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், தனக்காக ‘உழைத்துக் களைத்தவர்களை’ உற்சாகப்படுத்த விஜயமானவர் இப்படி ‘குளு குளு’ விருந்து கொடுப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், அப்போதெல்லாம் தனது ‘மலை’ தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டும் தான் அது ‘பாக்யமாகும்’.
இம்முறை, அந்த விருந்தை மாவட்ட அளவில் விரிவுபடுத்தினார். அந்த வகையில் தற்போதும் ஒரு பேட்ச் குற்றாலத்தில் ‘குளித்துக்’ கொண்டிருக்கிறதாம். இது மாத்திரமல்லாது, குளிக்கப் போனவர்கள் திரும்பி வந்ததும் அவர்கள் மூலமாக தனது தொகுதி முழுமைக்கும் இனிப்பு சகிதம் எவர்சில்வர் பாத்திரங்களை கிஃப்டாக கொடுக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம். இது இடைத் தேர்தலுக்கான முன் தேதியிட்ட கவனிப்பாம்.
விஜயமானவர், இலைக் கட்சியில் இனியும் இருக்கப் போவதில்லை என்று தெரிந்ததுமே, சூரியக் கட்சி தரப்பிலிருந்து முன்னாள் மாண்புமிகுக்கள் சிலர், ‘‘நம்ம பக்கம் வந்துருங்களே...” என்று பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
ஆனால், யாருக்கும் பிடிகொடுக்கவில்லையாம். அதேசமயம், விசில் கட்சி தரப்பில் பேசிய விஜயமானவர் தரப்பு, “தேர்தலுக்கான செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், ஜெயித்து வந்ததும் அண்ணனை மாண்புமிகுவாக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாகச் சொல்கிறார்கள். அந்த கோரிக்கைக்கு விசில் கட்சி தரப்பில் கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே அந்த பக்கம் விஜயமானவர் சாய்ந்ததாக கூறப்படுகிறது.