

கோப்புப் படம்
அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதன் விவரம்: இந்திய தேர்தல் ஆணையம், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்புடைய மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கலாம் என்பதன் அடிப்படையில் படிவம் 12டி கொடுத்து வாக்களிக்கும் உரிமையை கடந்த 2 தேர்தல்களாக கொடுத்துள்ளது. இந்த விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளில் சரியாக இல்லை. வாக்குச்சாவடி அலுவலர்களும் அதை முறையாக செயல்படுத்தவில்லை என பல்வேறு பகுதிகளிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் விபத்தால் காயமடைந்தும், திடீர் உடல்நலக் குறைவின் காரணமாகவும் நடக்க முடியாமல் பலர் வீட்டில் இருக்கின்றனர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் ஜனநாயகத்தின் முக்கிய குறிக்கோளின் அடிப்படையில் அவர்களும் வாக்கு செலுத்த வேண்டும்.
அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படக் கூடாது. அதனால், உடனடியாக மேலும் சில திருத்தங்களைச் செய்து அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்யும் விதமாக, அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் உடனடியாக ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று, நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக, உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.