புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
Updated on
1 min read

தவெக தலைவர் விஜய், புதுச்சேரியில் டிசம்பர் 9-ம் தேதி பங்கேற்கும் பொதுக்கூட்ட த்தில் 5 ஆயிரம் பேரை மட்டுமேஅனுமதிக்க வேண்டும் என போலீஸார் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது .

புதுச்சேரியில் இம்மாதம் 5-ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. என்றாலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து வரும் 9-ம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதற்கிடையில், தவெக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் நேற்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். பேசிமுடித்து விட்டு கையில் ஒரு கடிதத்துடன் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், திட்டமிட்டபடி 9-ம் தேதி தவெக பொதுக்கூட்டம் நடக்கிறதா என்று கேட்டதற்கு, “நடக்கிறது” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் உப்பளம் துறைமுக மைதானத்தை சீர் செய்யும் பணியை தவெக-வினர் நேற்று தொடங்கினர். மழையால் அந்த மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், மைதானம் மேடு பள்ளமாக உள்ளது. மண்ணைக் கொட்டி இதையெல்லாம் தவெக-வினர் சீர் செய்து வருகின்றனர்.

என்றாலும் இந்த மைதானத்தில் மேடை ஏதும் அமைக்காமல் பிரச்சாரப் பேருந்தில் இருந்தபடியே விஜய் பேசுவார் என்று தவெக-வினர் தெரிவித்தனர். அதேசமயம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் போலீஸார் விதித்துள்ளதாக தெரிகிறது.

மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்காத பகுதியை முழுமையாக மறைக்க வேண்டும். துறைமுகம் செல்லும் சாலையை போக்குவரத்துக்கு விட வேண்டும். கூட்டத்துக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை மட்டும் ‘கியூ.ஆர் கோடு’ முறை மூலம் அனுமதிக்க வேண்டும். விஐபி-களுக்கான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களையும், பொதுமக்களுக்கான தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தயாராக நிறுத்த வேண்டும்.

கார்கள் வந்து செல்ல தனி வழியை ஏற்படுத்த வேண்டும். 5 ஆயிரம் பேரை 10 கேபின் களாக பிரித்து ஒரு கேபினுக்குள் 500 பேர் வீதம் அமர்த்த வேண்டும். அவர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை போலீஸார் விதித்துள்ளதாக தெரிகிறது.

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
‘நிலைமை சீராக 5 முதல் 10 நாட்கள் ஆகும்’ - இண்டிகோ விமான நிறுவன சிஇஓ விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in