

கார்த்தி சிதம்பரம்
சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
அச்சமில்லை... அச்சமில்லை என்று மாணிக்கம் தாகூர் பாரதியார் கவிதையை பதிவிட்டதில் எந்த அரசியல் சர்ச்சையும் இல்லை. நல்ல கவிதை என்பதால் பிரபலப்படுத்துகிறார். தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக தலைமை வகிக்கிறது. அதில்தான் காங்கிரஸும் இருக்கிறது.
திமுக குழு அமைத்ததும் அவர்களுடன் காங்கிரஸ் குழு பேசி, போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்யும். தேர்தலுக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு பிரதானக் கட்சியைவிட பிற கட்சித் தலைவர் தலைமை தாங்கினால் சிறப்பாக இருக்கும். அதிலும் சுழற்சி முறையில் மாநில கட்சித் தலைவர்களை நியமித்தால் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு ரூ.5 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் வரவு வைத்தது வரவேற்கத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள பெண்கள் விடுபட்டுள்ளது சிறிய குறைபாடுதான். இந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் மட்டும் தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் வாக்குகளாகக்கூட மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.