

மதுரை பாலமேடு வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியேறிய காளை.
மதுரை: பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக களமாடிய காளைகள், அவற்றை அடக்கிய மாடுபிடி வீரர்களின் தீரத்தைக் கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.
மதுரை பாலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் தென்தமிழகம் முழுவதுமிருந்து கொண்டுவரப்பட்ட 1,000 காளைகள் களமிறக்கப்பட்டன. 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வழக்கமாக மணிக்குள் தொடங்கும் போட்டி சற்று தாமதமாகத் தொடங்கியது.
அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், துணை முதல்வர் உதயநிதி கொடியசைத்து போட்டியைத் தொடங்கிவைத்தார். பின்னர், அவர் ஒரு மணி நேரம் அரங்கில் அமர்ந்து, ஆட்சியர் பிரவீன்குமார், நடிகர் சூரி, ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் ஆகியோருடன் போட்டியை ரசித்தார். மேலும், சிறப்பாக காளைகளை அடக்கிய வீரர்கள், சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினார்.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 100 காளைகள் அவிழ்க்கப்பட்டன. சுற்றுவாரியாக அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்குத் தேர்வாகினர். பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை கண்டு ரசிக்க, வாடிவாசலில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு இருபுறங்களிலும் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன.
உள்ளூர் பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அதிகாரிகள், விஐபிகளுக்கு தனித்தனியாக அமைக்கப்பட்ட கேலரியில் அமர்ந்து ஜல்லி்க்கட்டைப் பார்வையிட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் ஒவ்வொரு சுற்றிலும் தங்ககாசு பீரோ, கட்டில், தங்க நாணயம், வெள்ளிக்காசுகள், மெத்தை, டிவி, வாஷிங் மிஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. வாடிவாசல் அருகே 12 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்று நடந்த ஜல்லிக்கட்டில் 986 காளைகள் பங்கேற்றன. 573 மாடுபடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 22 காளைகளை அடக்கிய மதுரை வலையங்குளத்தை சேர்ந்த பாலமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பாக விளையாடி பார்வையாளர்களைக் கவர்ந்த அவனியாபுரம் முத்துக்கருப்பன் காளையின் உரிமையாளருக்கு, துணை முதல்வர் உதயநிதி சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.