

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 15-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம், 1951-இன் பிரிவு 135B-ன்படி, வணிகம், வர்த்தகம், தொழில் துறை நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும், வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்காக ஊழியர்களின் ஊதியத்தில் எந்த பிடித்தமும் செய்யப்படக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு முதலாளியும் அபராதத்துக்கு உள்ளாவார்கள். அனைத்து தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறத் தகுதியுடையவர்கள்.
இந்த விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுவதற்கும், அனைத்து வாக்காளர்களும் சுதந்திரமாகவும் வசதியாகவும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும் தேவையான உத்தரவுகளை அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் பிறப்பிக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.