“டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைய வாய்ப்பு” - அமைச்சர் வினோத் தகவல்

“டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைய வாய்ப்பு” - அமைச்சர் வினோத் தகவல்
Updated on
1 min read

கும்பகோணம்: “காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்று வேளாண் அமைச்சர் வினோத் கூறியுள்ளார்.

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், அலுவலகத்தை தூய்மைப் பணியாளுடன் இணைந்து வேளாண் துறை அமைச்சர் வினோத் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மேலும், அலுவலகத்துக்குள் இருந்த முதல்வர் விஜய்யின் உருவப் படத்தை வணங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத் கூறியது: ”எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த கும்பகோணம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி என்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன். அதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களின் தேவையை அனைத்தையும் பூர்த்தி செய்வேன் என சத்தியமாக உறுதி அளிக்கிறேன்.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முதல்வரிடம் தெரிவித்து விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். திருவிடைமருதூர் தொகுதியில் வேளாண் கல்லூரி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், எந்தவொரு அரசும் ஆட்சிக்கு வந்த 40 நாட்களுக்குள் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பயிர்க் கடன் தள்ளுபடி செய்தது இல்லை. ஆனால், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களிலேயே பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்துள்ளோம்.

விரைவில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் ஆய்வு செய்து, அறிவிப்பை வெளியிடுவார். காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு உள்ளது, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

வாழை சாகுபடிக்கு காப்பீடு செய்வது தொடர்பாக இந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். அனைத்து துறையில் இருந்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பொறுத்திருந்து பாருங்கள்.

தமிழகத்தில் விவசாயத்தை முன்னோடியாக கொண்டுவர வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வளர்ச்சிப் பாதை கொண்டு செல்ல வேண்டும் என அவர் முயற்சித்து வருகிறார்.

காவிரி நீர் கண்டிப்பாக வரும். எல் நினோவால் டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் எந்த வகையான பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றோம். இதேபோல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அது சார்ந்த திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் வினோத் கூறினார்.

தொடர்ந்து, போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் தூய்மை பணியாளர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

“டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அமைய வாய்ப்பு” - அமைச்சர் வினோத் தகவல்
மதுரை கிரானைட் மோசடி வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் குழு: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in