

மதுரை: மதுரை மாவட்ட கிரானைட் மோசடி வழக்குகளை 3 மாதத்தில் முடிக்க சிறப்பு வழக்கறிஞர்கள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மேலூர், கீழவளவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட சர்வே எண்களில் குவாரி நடத்த பிஆர்பி நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இந்த உரிமத்தை பயன்படுத்தி உரிமம் வழங்கப்படாத அரசு நிலங்கள், நீர் நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்கள், அரசு தரிசு நிலங்கள் மற்றும் உரிமம் பெற்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள தனியார் நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக ரூ.7,237 கோடி அளவுக்கு கற்களை வெட்டி எடுத்ததாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில் பிஆர்பி நிறுவன மேலாண்மை இயக்குநர் பி.பழனிசாமி, அவர் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், மகள் செல்வி மற்றும் சந்திரலேகா, மகாராஜன் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இந்திய தண்டனை சட்டம், பொதுச் சொத்து சேதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் கனிமவள வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் சட்டவிரோத குவாரி வருவாயில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக பண மோசடி தடுப்புச் சட்டத்தில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் தங்கள் மீதான 22 குற்ற வழக்குகளையும், 12 வழக்குகளில் தங்களை விடுவிக்க மறுத்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும் பி.பழனிசாமி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராம கிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ”மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரியால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தார். இதையடுத்து கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆய்வுக்கு மோகன் தாஸ் குழுவை அப்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அமைத்தார். அந்தக் குழு 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வு நடத்தி சட்ட விரோதமாக 45,52,034.3 கியூபிக் மீட்டர் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.13,178.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்தது. இதையடுத்து கிரானைட் மோசடி தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு எதிராக மனுதாரர்கள் தாக்கல் செய்ய மனுக்களை தனி நீதிபதியும், அமர்வும் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம் உரிய அதிகாரிகளிடம் முறையிட உரிமை வழங்கி மனுவை முடித்து வைத்தது. மனுதாரர்கள் கூறுவது போல் உச்ச நீதிமன்றம் சேதத்தை மதிப்பிட குழு அமைக்க உத்தரவிடவில்லை. இருப்பினும் சில அரசு அதிகாரிகள் உச்ச நீதிமன்ற உத்தரவை தவறாக புரிந்துகொண்டு மனுதாரர்களுடன் கூட்டு சேர்ந்து மோகன் தாஸ் மதிப்பீட்டு அறிக்கையை மறு ஆய்வு செய்ய மற்றொரு குழு அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பொருளாதார குற்றங்களை பொருத்தவரை சட்ட விரோத ஆதாயம் அல்லது சட்ட விரோத இழப்பின் துல்லியமான அளவு குற்றத்தை நிரூபிக்க முக்கிய காரணியாக இருப்பதில்லை. அந்த அளவீடு குற்றம்சாட்டப் பட்டவரிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையின் அளவை மட்டுமே பாதிக்கும். குற்றம்சாட்டப் பட்டவரை குற்றவியல் பொறுப்பில் இருந்து விடுவிக்க காரணமாக இருக்காது.
மனுதாரர்கள் மீது சட்டவிரோத கிரானைட் குவாரி மூலம் மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பெரிய அளவிலான பொருளாதாரக் குற்றச்சாட்டுகள் உள்ளன. விசாரணை அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் மொத்த இழப்பு சுமார் ரூ.7,237.53 கோடிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் அளவு மற்றும் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மனுதாரர்கள் தரப்பு வாதத்தை ஏற்க விரும்பவில்லை.
மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டியெடுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை, சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்களை அரசு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் பிற பொதுச் சொத்துக்களில் சட்டவிரோதமாக சேமித்து வைப்பது வரையிலும் நீள்கின்றன.
மறு ஆய்வு மனுக்களை விசாரணை நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்ததில் எந்த குறைபாடும் தெரியவில்லை. வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்களை பொறுத்தவரை அரசு தரப்பு ஏராளமான ஆதாரங்கள், ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. அவற்றின் உண்மை தன்மையை முழுமையான விசாரணையின் போது தான் தீர்மானிக்க முடியும். மனுதாரர்கள் மீதான குற்ற வழக்கு 14 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. இதனால் தாமதமின்றி குற்றவியல் விசாரணையை முடிக்க வேண்டியது நீதியின் தேவையாகும்.
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. புதிய அரசு அமைந்தவுடன் சிறப்பு வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது அல்லது மறு ஆய்வு செய்வது சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படுவது நன்கு அறியப்பட்ட நிர்வாக நடைமுறையாகும்.
அதன்படி இந்த வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் வழக்கை திறம்பட நடத்த தகுதியான அரசு வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர் குழுவை அமைக்க தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த முறைகேட்டில் ரூ.13,178.49 கோடிக்கும் அதிகமான பொது வருவாய் சம்பந்தப்பட்டுள்ளது. இவற்றை வசூலிக்க அரசுக்கு உரிமை உண்டு என்பதையும் இந்த நீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது. மனுதாரர்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.