2026-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை: தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்
சென்னை: 2026-ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் அனைத்தும் தற்போதைய பாடத்திட்டத்தின் படியே நடத்தப்படும். பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசுத் துறைகளைப் பொருத்தவரை, நிதி ஆண்டின் கடைசியில்தான் (மார்ச்) காலிஇடங்கள் விவரம் கணக்கெடுக்கப்படும். சில துறைகளில் கட்-ஆஃப் தேதி வேறு மாதமாக இருக்கும். குரூப்-4, குரூப்-2,குரூப்-2ஏ தேர்வுகளில் இடம்பெறும் பதவிகள் தேர்வர்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும். அதேநேரம், தொழில்நுட்பத் தேர்வுகளில் காலி இடங்கள் அதிகம் வருவதில்லை. பெரும்பாலான பதவிகளில் காலிஇடங்கள் ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கும்.
முன்பு 2-3 ஆண்டுகளுக்கான காலி பணியிடங்களுக்கு சேர்த்து தேர்வு நடத்தப்பட்டது. தற்போது அந்தந்த நிதி ஆண்டுக்கான காலிஇடங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஆண்டிலேயே நிரப்பப்பட்டுவிடுகின்றன. அதனால், காலி இடங்கள் குறைவாக இருப்பதுபோல தெரியலாம்.
குறிப்பிட்ட தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் போது, என்னென்ன பதவிகள், எத்தனை காலி இடங்கள் என்ற முழு விவரமும் இடம்பெறும். புதிய பதவிகள் சேர்ந்தாலோ, காலி இடங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலோ பிற்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும்.
தேர்வர்கள் வருடாந்திர தேர்வு அட்டவணையை அடிப்படையாக வைத்து, பொதுவான கல்வித் தகுதி கொண்ட தேர்வுகளுக்கும், தாங்கள் கூடுதலாக பெற்றுள்ள சிறப்பு கல்வித் தகுதி உடைய தேர்வுகளுக்கும் முன்கூட்டியே தயாராவது நல்லது.2026-ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் தற்போதைய பாடத்திட்டத்தின்படியே நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
