

நயினார் நாகேந்திரன்
சென்னை: “அயோத்தி போல தமிழகம் மாறுவதில் தவறு இல்லை” என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவுநாளையொட்டி நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: “தமிழகத்தை அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. தமிழகத்தில் மதவாத அரசியல் எடுபடாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி தெரிவித்த கருத்து குறித்து கேட்கிறீர்கள்.
அயோத்தியும் இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தி இங்கிலாந்து, ஐரோப்பாவில் இல்லையே! அதனால், அயோத்தி போல தமிழகம் மாறுவதில் எந்த தவறும் இல்லை. நம் அனைவருக்கும் ராமரின் ஆட்சியை பற்றி தெரியும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி, ராமரின் ஆட்சியை தரும்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும். அதேநேரம் பக்கத்தில் தர்கா இருப்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே, தர்கா அருகில் செல்லாமல், தீபத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி அனுமதி அளித்திருக்கிறார்.
தர்கா சம்பந்தப்பட்டவர்களோ, இஸ்லாமியர்களோ யாரும் ஒருவர் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேச அவர்கள் விரும்பவில்லை.அதனால், அங்கே மத கலவரம் வருவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என கூறியிருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட வேளையில் தற்போது அவர் ஈடுபடுவது தெரிகிறது. அவருடைய கனவு பலிக்காது. எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது.
திமுகவின் ஆட்சிக் காலத்தின் 100 நாட்கள் எண்ணப்படுகிறது. அமித் ஷா எப்போது வேண்டுமானாலும் தமிழகம் வருவார். கூட்டணியில் நிறைய கட்சிகள் சேரும். நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
திமுக கூட்டணியில் நிச்சயம் குழப்பம் இருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. காங்கிரஸ், விசிகவுக்கு திமுக எத்தனை சீட் கொடுப்பார்கள். அதேநேரம், அமைச்சரவையில் அவர்களுக்கு திமுக இடம் கொடுப்பார்களா?” என்றார் நயினார் நாகேந்திரன்.