“தலைநகர் சென்னையில் பொதுமக்கள் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?” - வேல்முருகன் கேள்வி

வேல்முருகன் |கோப்புப் படம்

வேல்முருகன் |கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: “தலைநகர் என்பதற்காக மட்டும் சென்னை பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கினால்தான் அது பாதுகாப்பான தலைநகராக இருக்க முடியும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகிலுள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இருதரப்பினர் கத்திகளுடன் மோதிக்கொண்டதில், பொதுமக்கள் அச்சத்தில் சிதறி ஓடியதுடன், பலர் காயமடைந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஒரு மாநிலத்தின் தலைநகரில், பொதுமக்கள் வசிக்கும் அடர்ந்த குடியிருப்புப் பகுதியில் ஆயுதங்களுடன் மோதல் நடைபெறும் நிலை ஏற்பட்டிருப்பது, காவல்துறையின் கண்காணிப்பும் தடுப்பு நடவடிக்கைகளும் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறது.

மக்கள் வீதியில் நடமாட வேண்டாமா?. கத்திக்குத்துக்கு அஞ்சி ஓட வேண்டுமா?. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் போன்றவர்களின் படுகொலைக்கு பிறகும், தலைநகரில் சரியான கண்காணிப்புகள் இல்லாமல் இருப்பது ஏன்?.

சென்னை போன்ற பெரு நகரத்தில் பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் அடிப்படை கடமை. குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றம் நிகழாமல் தடுப்பதே திறமையான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தின் அடையாளம்.

இந்த மோதலுக்கான உண்மையான காரணம் என்ன?. ஆயுதங்களுடன் மோதியவர்கள் யார்?. இதற்கு முன்பே இவர்கள் மீது குற்றப் பின்னணி இருந்ததா?. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?. எந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு காவல்துறை எடுத்த உடனடி நடவடிக்கை என்ன? இதற்குப் பின்னால் போதைக் கலாச்சாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு, காவல்துறையும், தமிழக அரசும் வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.

சென்னை தலைநகர் என்பதற்காக மட்டும் பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கினால்தான் அது பாதுகாப்பான தலைநகராக இருக்க முடியும். இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த அரசியல் அல்லது சமூகப் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் , ஆயுத வன்முறையை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>வேல்முருகன் |கோப்புப் படம்</p></div>
“வந்த வேகத்தில் தவெக ஆட்சி படுபாதாளத்துக்கு சென்றுவிடும்” - வெளிநடப்பு செய்த இபிஎஸ் ஆவேசம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in