

எடப்பாடி பழனிசாமி
சென்னை: “ஆட்சி அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தவெகவினர் நினைக்கின்றனர். எந்த அளவுக்கு வேகமாக இந்த ஆட்சி வந்ததோ, அதே அளவுக்கு வேகமாக விரைவில் படுபாதாளத்துக்கு சென்றுவிடும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுக்க மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆகஸ்டு 12-ம் தேதி சவுதியில் தங்கியிருந்த 4 மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது ஈரான் கடல்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் குண்டடிப்பட்டு உயிரிழந்த மீனவர் மாவீரன்(38) உடலை மயிலாடுதுறைக்கு கொண்டுவர வேண்டும்.
அங்கு படுகாயமடைந்து சவுதியில் சிகிச்சை பெறும் 3 மீனவர்களை மீட்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது 5 நாட்களாக சட்டப்பேரவையில் குரல் எழுப்பி வருகிறோம். ஆனால், இதனை குறிப்பிடக்கூட சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதற்காக நாங்கள் வெளிநடப்பு செய்யும்போது தவெக உறுப்பினர்கள் சிரிக்கின்றனர். உணர்வுள்ள தமிழர்கள் இப்படிச் சிரிப்பார்களா?.
இப்போது ஆட்சியே நடக்கவில்லை, ரீல்ஸ்தான் விடுகின்றனர். இவர்கள் எப்படி நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்கள். கர்நாடகாவில் பூர்வீகமாக வசிக்கும் 3 தமிழர்கள் வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர், அதற்கும் இந்த அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்படி வெளிமாநிலத்தில் இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் கடந்த கால அரசுகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பார்கள்.
ஆனால், இப்போதைய அரசு எதைப்பற்றியும் கவலைப்படுவது இல்லை. இந்த அரசுக்கு தமிழ் உணர்வு என்பதே இல்லை, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆட்சி அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என தவெகவினர் நினைக்கின்றனர். மக்கள் இதனை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு வேகமாக இந்த ஆட்சி வந்ததோ, அதே அளவுக்கு வேகமாக விரைவில் படுபாதாளத்துக்கு சென்றுவிடும்” என்றார்.