

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்துக்கான மானிய நிதி ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். இசை, கவின் கலை பயிலும் மாணவர்களுக்கும் ‘நான் முதல்வன்’ திறன் சார்ந்த படிப்புகள் விரிவுபடுத்தப்படும் என்று பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசியதாவது:
ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் எந்த பாகுபாடும் காட்டவில்லை. பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவில்லை. மாறாக, 2021-க்கு பிறகு, பல்கலைக்கழகத்தை மேலும் செழுமையாக வளர்த்திருக்கிறோம். இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு. இது இனி எப்போதும் தொடர வேண்டும்.
கலைகள், கலைஞர்களை மதித்துப் போற்றுவது தமிழ் மண். அது ஒரு நல்ல அரசின் கடமையும் கூட. இது பட்டமளிப்பு விழா என்றாலும், கலை வளர்க்கும் அரசின் சார்பில் 4 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். தமிழகத்தின் மரபுக் கலைகளான கிராமிய, நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளத்தில் கிராமிய கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்படும்.
இசை பல்கலைக்கழகத்தில் கவின்கலையில் புதிதாக கலை பாதுகாப்புப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு 2026-27-ம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்படும். இசை பல்கலைக்கழகத்துக்கான மானிய நிதி ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். இசை, கவின் கலை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் ‘நான் முதல்வன்’ திறன் சார்ந்த படிப்புகள் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கலைத் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி அரசு கவின்கலை கல்லூரி முன்னாள் முதல்வரும், மூத்த ஓவியருமான சந்துரு, நடிகர் சிவகுமார் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர்கள் தமது ஏற்புரையில் பேசியதாவது:
நடிகர் சிவக்குமார்: எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாத கருணாநிதி, சங்க இலக்கியத்துக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் உரை எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது தந்தை போலவே சிறப்பாக ஆட்சி நடத்துகிறார். கடந்த 2018-ல் கருணாநிதி
மறைந்தபோது கோவையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் ‘நீங்களும் முதல்வராக வருவீர்கள்’ என்றேன் எனது வாக்குபலித்து, 2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆனார். காலை உணவு, தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண், வீடு தேடி மருத்துவம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி திறம்பட ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் பொறுப்பில் நீடிக்க வேண்டும்.
ஓவியர் சந்துரு: தமிழகத்தில்தான் இலக்கியக் காட்சிகள், படைப்பாளிகளுக்கும் நினைவுச் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன. சங்க இலக்கியக் காட்சிகளையும் சிற்பங்களாக காணலாம். இதற்
கெல்லாம் காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இவ்வாறு அவர்கள் பேசினர். கருணாநிதியின் திரைப்பட வசனங்களை சிவக்குமார் நீண்ட நேரம் மூச்சுவிடாமல் உணர்ச்சி பொங்க பேசியபோது முதல்வர் உட்பட அனைவரும் கைதட்டி பாராட்டினர். 1,846 பேருக்கு பட்டம்: விழாவில், மேலும் 10 பேர்: முதல்வரிடம் இருந்து பிஎச்டி பட்டத்தை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பட்டங்களை வழங்கினார். இசை, கலை தொடர்பான பல்வேறு படிப்புகளில் 1,846 பேர் பட்டம் பெற்றனர்.
துணைவேந்தர் சி.சவுமியா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். கலை பண்பாட்டுத் துறை செயலர் க.மணிவாசன், இயக்குநர் எஸ்.வளர்மதி, பல்கலைக்கழக பதிவாளர் பூமாலினி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முத்துக்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.