

சென்னை: சென்னையில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் காவல் ஆணையர் அமல்ராஜ் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
லஞ்சம் பெறுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் தனிப்பிரிவு மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் மீது பணியிடை நீக்கம், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம், ஆயுதப்படைக்கு மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், சென்னையில் பணியாற்றிய 60 போலீஸார் பிற மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 போலீஸார் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியதாவது: பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக போலீஸாரை நாடுகின்றனர். அவர்களிடமே பணம் பெறுவதையோ, முறைகேட்டில் ஈடுபடுவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். நான் யாரிடமும் பணம் பெறமாட்டேன். காவல்துறையினர் லஞ்சம் பெற்றாலும் அவர்களை விடமாட்டேன்.
சைபர் குற்றங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பொதுமக்கள் ஒரே நிமிடத்தில் இழந்து விடுகின்றனர்.
சென்னையில் மட்டும் ஆன்லைன் மோசடி மூலம் பொதுமக்கள் ரூ.370 கோடி வரை பணத்தை இழந்துள்ளனர். இதில் ரூ.100 கோடி முடக்கப்பட்டுள்ளது.ரூ.20 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிட்டால், 24 மணி நேரத்துக்குள் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு விரைவாக புகார் அளித்தால் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியும். எனவே, இவ்வாறு காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.